புதுச்சேரி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பொறியியல் மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
புதுவை மாநிலம், திருபுவனையைச் சேர்ந்த அமரன் மகன் மோகன் (24), தனியார் நிறுவன ஊழியர். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சந்திரன் மகன் பரத் (21). இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தார். நண்பர்களான இருவரும் செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் திருபுவனையில் இருந்து புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டி வர, பரத் பின்னால் அமர்ந்து வந்தார்.
வடமங்கலம் அருகே அவர்கள் வந்தபோது பின்னால் வந்த வேன் இவர்களது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது அவர்கள் மீது வேன் ஏறி இறங்கியது. இதில் பரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மோகன் உயிரிழந்தார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் ராஜசேகர வல்லாட், உதவி ஆய்வாளர் கலியபெருமாள் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.