புதுவையில் வீடு புகுந்து பணம், செல்லிடப்பேசியை திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரியமாணிக்கம் ஏரிப்பாக்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சதிஷ் (26). கிரேன் ஆபரேட்டர். கடந்த 7-ஆம் தேதி இவரது வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து சதிஷின் விலை உயர்ந்த செல்லிடப்பேசி மற்றும் ரூ.10,000-ஐ திருடிச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சதிஷ் வைத்திருந்தது போன்ற சட்டையை அணிந்து சென்றுள்ளார். இதைக் கண்ட சதீஷ், உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவரது பெயர் அய்யப்பன் (23) என்பதும், சதீஷின் வீட்டில் திருடியதையும் ஒத்துக்கொண்டார். அவருடன் 18 வயதுக்கு உள்பட்ட 2 சிறுவர்களும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அய்யப்பனை காலாப்பட்டு சிறையில் அடைத்த போலீஸார், சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.