புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு பல்பொருள் அங்காடியை முதல்வர் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார்.
புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் பாப்ஸ்கோ சார்பில், 25-ஆவது ஆண்டாக ஏஎஃப்டி மைதானத்தில் நடைபெறும் தீபாவளி சிறப்பங்காடி விற்பனையை, முதல்வர் நாராயணசாமி குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசியதாவது: கடந்த ஆண்டு ரூ.14 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. நிகழாண்டு 15 கோடி அளவுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடங்கியுள்ள விற்பனையானது தினம்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
பட்டாசு, மளிகைப் பொருள்களை குறைந்த விலையில் மக்கள் வாங்கி பயன் பெறலாம் என்றார்.
நிகழ்ச்சியில் பாப்ஸ்கோ மேலாண் இயக்குநர், குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் பிரியதர்ஷினி மற்றும் பலர் பங்கேற்றனர்.