புதுச்சேரியை அடுத்த பாகூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல் துறையினர் வியாழக்கிழமை சமாதானக் கூட்டம் நடத்தினர்.
சேலியமேட்டில் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 1-ஆம் தேதி அந்தப் பகுதியைச் சேர்ந்த சில மாணவர்கள் கிரிக்கெட் விளையாடினர்.
இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பள்ளி வளாகத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படம் அடித்து நொறுக்கப்பட்டு கீழே சிதறிக் கிடந்ததாம். இதைக் கண்டித்து, சுமார் 200 }க்கும் மேற்பட்டோர் பாகூர் - வில்லியனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைந்து போகச் செய்ய போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
இதனிடையே, அவர்கள் அரங்கனூர் வழியாகச் சென்றபோது அங்கிருந்த பாமக கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்சிச் சென்றனராம். இதனால், அரங்கனூர் பகுதி மக்கள் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரங்கனூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இருதரப்பு மோதலால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, இரு தரப்பைச் சேர்ந்த 226 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், பாகூர் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், இரு தரப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.