சமூக வலைதளங்களில் கேலி எதிரொலியாக புதுச்சேரி சிறைத் துறையின் இணையதளம் திடீரென முடக்கப்பட்டது.
புதுவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் வரும்போதும் புதிதாக பொறுப்பேற்கும் முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பழைய பொறுப்புகளில் உள்ளவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, புதிதாகப் பொறுப்பேற்றவர்களின் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது புதுச்சேரி சிறைத்துறை முதல்வர் நாராயணசாமி வசம் உள்ளது. இந்த நிலையில், முதல்வர் நாராயணசாமி பொறுப்பேற்று ஓராண்டுக்கு மேலாகியும் சிறைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அவரது பெயர் இடம் பெறவில்லை. மாறாக, முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் பெயரே இடம் பெற்றிருந்தது.
மேலும், தற்போதுள்ள தலைமைச் செயலர் மனோஜ் பரிதா பெயருக்குப் பதிலாக முன்னாள் தலைமைச் செயலரின் பெயர் சாட்டன் பி சாங்கி என இடம் பெற்றிருந்தது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அந்த இணையதளத்தை சிறைத்துறை நிர்வாகம் முடக்கியது.