பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அலுவலர்கள் மற்றும் ஊழியர் நலச் சங்கத்தினர் புதன்கிழமை மாலை சட்டப்பேரவையை நோக்கி கவன ஈர்ப்புப் பேரணியை நடத்தினர்.
இந்தப் பேரணியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலர் பாவாணன், புதுவை அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சம்பந்தம் ஆகியோர் தொடக்கிவைத்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
ஊழியர்கள் நலச் சங்கத் தலைவர் வாணிதாசன் தலைமை வகித்தார். செயலர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் வரவேற்றனர். பொருளாளர் தேவன், இணைச் செயலர்கள் பாலமுருகன், சேதுராமன், வசந்தராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பிரவீனா, விஜயலட்சுமி, மகாலட்சுமி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் மற்றும் காரைக்கால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது, 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
நோயாளி பராமரிப்பு படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஊழியர்கள் கையில் ஏந்திச் சென்றனர்.
கம்பன் கலையரங்கம் அருகே தொடங்கி பேரணி அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக புனித ஜென்மராக்கினி பேராலயம் அருகே சென்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், சங்க நிர்வாகிகள் சட்டப்பேரவைக்குச் சென்று சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.