தீபாவளி பரிசுத் தொகை அறிவிப்பை வெளியிடக் கோரி, புதுச்சேரி அமைப்பு சாரா நலச் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்க அலுவலகத்தில் சுமார் 30,000 மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்கள், கடை வைத்திருப்பவர்கள் என 24 வகையான தொழிலில் ஈடுபடுபவர்கள் இதில் அடங்குவர்.
இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு இதுகுறித்த எந்த அறிவிப்பையும் அரசு இதுவரை வெளியிடவில்லை.
இதனிடையே, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி தொகை ரூ. 2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உறுப்பினர்கள் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், சிஐடியு உடல் உழைப்போர் சங்கம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச் சங்க அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
அந்தச் சங்கத்தின் செயலர் சீனுவாசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் குமார், மதிவாணன், ராமசாமி, மது, ராதாகிருஷ்ணன் உள்பட ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் கோபமடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து பேரணியாகச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது தலைமைச் செயலகம் முன் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பெரியக்கடை போலீஸார் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். அவர்கள் அமைச்சரை தொடர்பு கொண்டு பேசி வெள்ளிக்கிழமை முதல் கூப்பன் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.