உலக விழி தேடுவோர் தினத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் 39 மில்லியன் மக்கள் பார்வையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் மக்கள் பார்வைக்காக ஏங்கி வருகின்றனர். எனவே, கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி புதுச்சேரியில் நடைபெற்றது.
உலக விழி தேடுவோர் தினத்தை முன்னிட்டு பார்வைத் திட்டம் புதுவை கூட்டமைப்பு சார்பில், கண் தானத்தை வலியுறுத்தி அண்ணா திடலில் தொடங்கிய இந்தப் பேரணியை ஜோதி கண் மருத்துவமனை நிறுவனர் வனஜா வைத்திநாதன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். புஸ்ஸி வீதி வழியாகச் சென்ற இந்த விழிப்புணர்வுப் பேரணி கடற்கரை சாலையில் முடிவடைந்தது.
பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கண் பார்வையற்றவர்களும், 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் கண்களை மறைத்து கருவிழி படலம் தேடி என்ற நிலையை உணர்த்தியும், கண் தானத்தை வலியுறுத்தியும் பங்கேற்றனர்.
அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி முதுநிலை முதல்வர் எஸ்ஏ.லூர்துசாமி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன்குமார், பேட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் ரெஜிஸ் ஜான் பிரிட்டோ, சவேரியார் மேய்ப்புப் பணி மையத்தின் இயக்குநர் பிலோமின் தாஸ் உள்பட பலர் பேரணியில் பங்கேற்றனர்.