புதுச்சேரி அறிவியல் - தொழில்நுட்பத் துறை சார்பில், "ஓசோன் படலத்தைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி சனிக்கிழமை (செப். 16) காலை 10 மணியளவில் லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் நடைபெறுகிறது.
உலகில் வாழும் உயிரினங்களை சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சில் இருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் 16-ஆம் தேதி ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக பன்னாட்டு அமைப்புகள் கடைப்பிடித்து வருகின்றன.
இதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக சூரியனின் கீழ் உள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பில் 13 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி அடையாள அட்டை நகலுடன் பங்கேற்கலாம். ஓவியப் போட்டிக்கான பொருள்கள் அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் வழங்கப்படும்.