2017 - 18 ஆம் ஆண்டுக்கான திட்ட ஆய்வு, துறை ரீதியிலான செலவினங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், அமைச்சர்கள் மல்லாடி, கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலர் மனோஜ் பரிதா மற்றும் அனைத்துத் துறை செயலர்கள், அனைத்துத் துறை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த பட்ஜெட் தாக்கலின்போது துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதியில் செலவினங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நடைமுறையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
திட்ட நிதியை இறுதிக் காலத்தில் செலவிடாமல் மாதந்தோறும் சராசரியாகச் செலவிட்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி முழுவதையும் செலவிட வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி முழுவதையும் செலவிட வேண்டும் என்பதில் முதல்வர் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், அதன் காரணமாகவே கடந்த ஆண்டு 97 சதவீதம் வரை நிதி செலவு செய்யப்பட்டதாகவும், நிகழாண்டும் இதேபோல செலவு செய்யவேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால்தான் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் துறை ரீதியான கூட்டத்தை 3 மாதங்களுக்கு முன்பாகவே நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.