விதைக்கரணைகளின் நாற்றாங்கால் மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுச்சேரி வேளாண்துறைக் கூடுதல் இயக்ககம் தெரிவித்தது.
புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கரும்பு விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு, பதிவு பெற்ற கரும்பு நாற்றாங்கால் பயிருக்கான சர்க்கரை ஆலைகளின் அனுமதி ரசீதின் பேரில், 2017-18 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தின் நடவு கரும்புக்காக வழங்கும் விதைக்கரணைகளின் நாற்றாங்கால் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேர் நடவுக்கு விதைக்கரணைகள் வழங்கும் விவசாயிகளுக்கு ரூ. 4,000 மானியமாக வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை தட்டாஞ்சாவடியில் உள்ள பயிற்சி வழித் தொடர்புத் திட்டக் கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விதைக்கரணைகள் வழங்கப்பட்ட விவரங்களுக்கான சர்க்கரை ஆலை கரும்பு அதிகாரிகளின் சான்றிதழ்களுடன் அந்த அலுவலகத்தில் 16.10.2017 தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.