புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்புப் பகுதி கடை வளாகம் பயனின்றி உள்ளது. அதனைச் சுத்தப்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என ஆளுநர் கிரண் பேடி கூறினார்.
வார இறுதி நாள்களில் புதுவை பகுதிகளில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூய்மை இந்தியா திட்டம், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, குப்பைகள் வாருதல், நீர் நிலைகள் பாதுகாப்பு தொடர்பாக அவர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அவர், சனிக்கிழமை லாஸ்பேட்டையில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பை ஆய்வு செய்தார்.
அங்கு வட்ட வடிவில் கட்டப்பட்ட கடை வளாகம், அதில் உள்ள அறைகள் பயன்பாடின்றி இருப்பதை கண்டார். எனவே, அவற்றைச் சுத்தப்படுத்தி, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர், புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். அங்கு பயணிகள் அமரும் இருக்கைகள், கழிவறைகள் உள்பட அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்த அவர், பேருந்து நிலையத்தைச் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக ஆளுநர் கிரண் பேடி கூறியதாவது:
லாஸ்பேட்டை அரசு ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள கடை வளாகம் பயன்பாடின்றி உள்ளது. குடியிருப்பு வாசிகளுக்குப் பயன் தரும் வகையில் அந்தக் கடைகளைத் திறந்து பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள், மகளிர் சங்கங்களை இதில் ஈடுபடுத்தலாம்.
அரசு ஊழியர்கள் குடியிருப்பு வாசிகளும் தங்களுக்கு என குடியிருப்போர் நலச் சங்கத்தைத் தொடங்கி அனைத்து ஆதாரங்களையும் முறையாகப் பயன்படுத்த வேண்டும். பல்வேறு கட்டடங்கள் கடன் வாங்கி கட்டப்பட்ட நிலையில், அவை வீணாகப் பயன்படுத்தப்படாமல் அவற்றுக்கு வட்டி மட்டும் செலுத்துவது வேதனை தரும் விஷயம் என்றார் கிரண் பேடி.