இந்தியக் கடலோரக் காவல் படை புதுச்சேரி தலைமையகம் சார்பில், சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு, கடற்கரையில் துப்புரவுப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், கடலோரப் பகுதிகள் மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர்
16-ஆம் தேதி சர்வதேச கடலோரத் தூய்மை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
நிகழாண்டும் இந்திய கடலோரக் காவல் படை, புதுவை உள்ளாட்சித் துறை, என்.எஸ்.எஸ்., புதுவை கடலோர மேலாண்மை ஆணையம் ஆகியவை சார்பில், சர்வதேச கடலோரத் தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
புதுவை கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நலத் துறை அமைச்சர் கந்தசாமி தலைமை வகித்தார். முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு கடற்கரைச் சாலை, கடலோரப் பகுதிகளில் தூய்மை செய்யும் பணியைத் தொடக்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி. தியாகி,
உதவி கமாண்டன்ட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூய்மைப் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்று துப்புரவுப் பணியை மேற்கொண்டனர்.
இதேபோல, காலாப்பட்டு, ஆரோவில், புதுக்குப்பம், மூர்த்திக்குப்பம், நரம்பை, வீராம்பட்டினம், சோலை நகர் ஆகிய கடற்கரையோரப் பகுதிகளிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.