நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முற்போக்கு மாணவர் கழகம் ஆகியவை சார்பில் புதுச்சேரி தலைமைத் தபால் நிலையம் அருகே சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அரியலூர் மாணவி அனிதாவின் இறப்புக்கு நீதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலர் தேவ.பொழிலன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் உதயபாஸ்கர், தொல்காப்பியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக.ஆதிரை வரவேற்றார். கட்சியின் பொதுச் செயலர் துரை.ரவிக்குமார் போராட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினார்.
நிர்வாகிகள் மா.செ.சிந்தனைச் செல்வன், அரசு, வணங்காமுடி, பொதினிவளவன், ப.அமுதவன் உள்பட பலர் பேசினர்.
முற்போக்கு மாணவர் கழகத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் உள்பட பலர் பங்கேற்றனர். தி.பாவலன் நன்றி கூறினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான முற்போக்கு மாணவர்கள் கழகத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.