புதுவையில் மாயமான பள்ளி மாணவர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவை அரியாங்குப்பம் சாமிநாத நாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ்அருள் (வயது 45). பெயிண்டர். இவரது மகன் பீட்டர்ஜான் (வயது 16). ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பீட்டர்ஜானுக்கு அப்பள்ளியில் படிக்க விருப்பம் இல்லை என பெற்றோரிடம் கூறி வந்தாராம். 10-ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், மாற்றுப் பள்ளியில் சேர்க்காமல், பிளஸ் 2 வரை அங்கேயே படிக்கும்படி பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், பீட்டர்ஜான் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து, திங்கள்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறிய அவர் வீடு திரும்பவில்லை.
தந்தை பிரான்சிஸ்அருள் அரியாங்குப்பம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் பீட்டர்ஜானின் செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது, அவர் விழுப்புரத்தில் இருப்பதாக காட்டியுள்ளது.
இதையடுத்து, போலீஸார் பீட்டர்ஜானின் தந்தையை அழைத்துக் கொண்டு விழுப்புரம் சென்றனர். அங்கு மீண்டும் அவரிடம் தொடர்பு கொள்ள முயன்றபோது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், மாயமான மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.