புதுவை பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்கள் சங்கத்தினர் ஊதிய உயர்வு கேட்டு புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை பொதுப் பணித் துறையில் 1,311 வவுச்சர் ஊழியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200
ஊதியமும், 16 நாள்கள் வேலையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தங்களுக்கான தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். முழுநேர தினக் கூலியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கடந்த 10 மாதமாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து பொதுப்பணித் துறை அரசு பணியாளர்கள் நலக்கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பிரபு, வெங்கடேசன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் குறைந்த பட்ச சட்டக்கூலி ரூ.398 நடைமுறைப்படுத்த வேண்டும். 1,311 ஊழியர்களுக்கும் மாதம் 26 நாள்கள் வேலை வழங்கி 30 நாள்கள் ஊதியத்தை வழங்க வேண்டும். முழுநேர தினக் கூலியாக நிரந்தரம் செய்து பணியாணை வழங்க வேண்டும். நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க மிட்டனர்.