பொதுப்பணித் துறை ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்

புதுவையில் பொதுப்பணித் துறை தினக்கூலி ஊழியர்கள் தங்களுக்கு கூடுதல் நாள்கள் வேலை வழங்க வலியுறுத்தி புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவையில் பொதுப்பணித் துறை தினக்கூலி ஊழியர்கள் தங்களுக்கு கூடுதல் நாள்கள் வேலை வழங்க வலியுறுத்தி புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுவை பொதுப்பணித் துறையில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு மாதம் 16 நாள்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் வேலை நாள்களை உயர்த்தி வழங்கக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பேரில், பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், இவர்களுக்கு 16 வேலை நாள்களில் இருந்து 21 வேலை நாள்களாக உயர்த்தி வழங்குவதாக, கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தின்போது அறிவித்திருந்தார். ஆனால், பொதுப்பணித் துறை நிர்வாகம் அதற்கான உத்தரவை வழங்கவில்லை.
 இதனால், உத்தரவை வழங்கக் கோரி கடந்த மாதம், பொதுப்பணித் துறை தினக்கூலி ஊழியர்கள் தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வலியுறுத்தினர். அப்போது, ஒரு வாரத்துக்குள் வேலை நாள்கள் உயர்த்தி வழங்கப்படும் என பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் உறுதி அளித்திருந்தார். ஆனால், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தினக்கூலி ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர், புதன்கிழமை பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன் திரண்டனர்.
 மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமணசாமி தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூடுதல் வேலை நாள்களுக்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகு தலைமை பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com