அவமானங்களை தனது அறிவாற்றலால் அம்பேத்கர் வென்றார் என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் புகழாரம் சூட்டினார்.
அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த தினத்தையொட்டி புதுச்சேரி பல்கலை.யில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலை. நிர்வாக கட்டடத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஜவாஹர்லால் நேரு அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்துக்கு மரியாதை செலுத்தி அவர் பேசியதாவது:
உலக அளவில் மதிக்கத்தக்க கல்வியாளராக, சிந்தனையாளராக திகழ்ந்து வருபவர் அம்பேத்கர். தம் வாழ்நாளில் பல்வேறு இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்திருந்தாலும் அவற்றையெல்லாம் அறிவாற்றலால் வென்று, பெரும் சிந்தனையாளராகவும், புரட்சியாளராகவும் விளங்கினார்.
அவருடைய வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது, பலமணி நேரங்கள் அவர் நுôலகத்தில் அமர்ந்து படித்ததும், அதனால் பெற்ற அறிவுத் திறனால் பல்வேறு ஆய்வு மற்றும் அரசியல் கட்டுரைகளை எழுதியதையும் உணர முடியும்.
இதை வாழ்க்கையில் சாதிக்க விரும்பும் ஒவ்வொரு மாணவரும் பின்பற்றினால் இந்தியா பெரும் வல்லரசுத் தேசமாக மாறும்.
தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் தமிழ்ப் புத்தாண்டு தினமும், "பிசாகி' என்றழைக்கப்படும் பஞ்சாப் புத்தாண்டு தினமும் ஒருங்கிணைந்து ஒரே நாளில் கொண்டாடப்படுவது இந்தியாவின் ஒற்றுமையையும், அன்பையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது என்றார்.
நிகழ்ச்சியில் பல்கலை. பதிவாளர் (பொ) தரணிக்கரசு, நிதி அதிகாரி (பொ) மாளபிகா தியோ, துணைப் பதிவாளர் முரளிதாசன், காவல்துறை கண்காணிப்பாளர் ரவிக்குமார் , தமிழ்த்துறை புல முதன்மையர் திருநாகலிங்கம், பேராசிரியர்கள், அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.