மக்கள் நலத் திட்டங்களை முடக்கினால் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம் என்று புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவுக்குத் தலைமை வகித்த அவர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்க்கும் சூழல் நாட்டில் உருவாகியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம் எனக்கூறி,
இந்தியாவை காவி மயமாக்குவது ஒன்றே லட்சியமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அனைவரையும் சகோதர, சகோதரிகளாக நடத்தும் ஒரே இயக்கம் காங்கிரஸ்தான். நேரு காலத்தில் இருந்தே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கியது காங்கிரஸ் கட்சிதான். பாஜக எந்த ஒரு புதிய திட்டத்தையும் கெண்டுவரவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியை துணிந்து எதிர்க்கும் முதல்வராக நாராயணசாமி உள்ளார். நாட்டில் முதல் முதலாக பிரதமருக்கு கண்டனக் குரல் வருகிறது என்றால் அது புதுச்சேரியில் இருந்துதான். மாநில அரசுக்கான உரிமையை தர மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி நதிநீர் ஆணையம், நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் ஆகிவற்றுக்காக முதல்வர் நாராயணசாமி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
புதுவையில், மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து முட்டுக்கட்டையிட்டால் ஆளுநர் கிரண் பேடியை எதிர்ப்போம். பதவியைப் பற்றிக் கவலை இல்லை. மக்கள் கொடுத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துவோம். இடையூறு ஏற்பட்டால் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் எதிர்த்துப் போராடுவோம்.
வரவுள்ள 2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வெற்றி பெற்று பிரதமராக வருவது உறுதி என்றார் நமச்சிவாயம்.