வாடகை வீடுகளை போகியத்துக்கு விட்டு மோசடி: தம்பதி மீது மேலும் ஒரு வழக்கு 

வாடகை வீடுகளை போகியத்துக்கு விட்டு (லீஸ்) மோசடி செய்த சம்பவம் தொடர்பாக தம்பதி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வாடகை வீடுகளை போகியத்துக்கு விட்டு (லீஸ்) மோசடி செய்த சம்பவம் தொடர்பாக தம்பதி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர் விஜய் (33). வீடுகளை போகியத்துக்கு விடும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, அந்த வீடுகளை போகியத்துக்கு விட்டுள்ளார்.
 இந்த நிலையில், ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் விஜய் மீது உப்பளம் கோலாஸ் நகர் ஜான் பிரிட்டோ நகரைச் சேர்ந்த சுஷ்மா பட்டேல் (28) என்பவர் கடந்த வாரம் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.
 இந்த நிலையில், விஜயிடம் ஏமாந்த பலர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதனையடுத்து, லாசுப்பேட்டை காமராஜர் நகர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஜேக்கப் (53) என்பவர் லாசுப்பேட்டை காவல் நிலையத்தில் விஜய் மீது புகார் அளித்தார்.
 அந்தப் புகாரில், லாசுப்பேட்டை பிரதான சாலையில் எனது மகள் கிருஷ்ணாவுக்கு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கடந்த 2015- ஆம் ஆண்டு விஜயும், அவரது மனைவி அனுக்கிரகாவும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பை வேறு நபர்களுக்கு போகியம் விட்டுள்ளனர்.
 இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, அடுக்குமாடி குடியிருப்பை மீட்டுத் தருமாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
 இதனையடுத்து, விஜய், அவரது மனைவி அனுக்கிரகா ஆகியோர் மீது லாசுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது விஜய் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விஜயின் மனைவி அனுக்கிரகாவை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com