புதுவை கிராமப் பகுதியில் ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓடினர்.
புதுச்சேரி அருகேயுள்ள சந்தைபுதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகீர்த்தி. செங்கல் வியாபாரி. இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு பேர் திருடும் முயற்சியில் பின் கதவை உடைத்து உள்ளே வர முயன்றுள்ளனர். கதவு உடைக்கும் சப்தம் கேட்டு ஜெயகீர்த்தி வெளியே வந்து பார்த்தார். அப்போது இருவர் உடலில் வெறும் ஜட்டி (உள்ளாடை) மட்டும் அணிந்து கதவை உடைத்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
இருந்தும் அந்த இருவரும் வீடு புகுந்துள்ளனர்.
இதையடுத்து ஜெயகீர்த்தி வீட்டின் வெளியே சென்று கூச்சலிட்டதால் கிராம மக்கள் திரண்டனர்.
இதையடுத்து அந்த இருவரும் தப்பி ஓடியுள்ளனர். பொதுமக்கள் துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து காட்டேரிக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தடயவியல் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயகீர்த்தியின் வீட்டில் கடந்த ஆண்டு இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்று பணம், நகை திருடு போய் உள்ளது. குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.