புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில், கல்வித் துறை துணை இயக்குநர் உயிரிழந்தார்.
புதுச்சேரி நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் எஸ்.மூர்த்தி (55). புதுவை பள்ளிக் கல்வித் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இவர், புதன்கிழமை இரவு புதுச்சேரிக்கு வந்துவிட்டு, பின்னர் நைனார்மண்டபம் பிரதான சாலையில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையில் பாதசாரி ஒருவர் திடீரென குறுக்கே வந்துள்ளார். அவர் மீது பைக் மோதால் இருக்க, திடீரென மூர்த்தி பிரேக் போட்டுள்ளார். இருப்பினும், பாதசாரி மீது மூர்த்தியின் பைக் லேசாக மோதிவிட்டு, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதிக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து மயக்க நிலையில் இருந்த மூர்த்தியை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூர்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து புதுவை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சுஜித், காவல் உதவி ஆய்வாளர் லட்சுமணன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த மூர்த்திக்கு மல்லிகா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.