புதுச்சேரியில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் விநாயகர் கோயில் வீதியில் வசிப்பவர் பொன்னரசன் (26). கட்டட தொழிலாளியான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்லபெருமாள்பேட்டை சீனுவாச கவுண்டர் வீதியைச் சேர்ந்த சுந்தரேசன் மகள் நிவேதாவை (23) காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு 3 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில், தம்பதியிடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, கணவரிடம் கோபித்துக் கொண்டு நிவேதா தனது கைக்குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
அங்கு, அவருக்கு பெற்றோர் அறிவுரை கூறி, மீண்டும் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனராம்.
இதனால், விரக்தியடைந்த நிவேதா வீட்டில் உள்ள தனது அறையில் தனது குழந்தையை தூங்கவைத்துவிட்டு, சனிக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து நிவேதிதாவின் தந்தைக்கு பொன்னரசன் தகவல் அளித்தார்.
இதுதொடர்பாக சுந்தரேசன் அளித்த புகாரின் பேரில், லாசுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், வட்டாட்சியர் விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டது.