புதுச்சேரியில் மலர் மற்றும் காய் கனி கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.2) தொடங்குகிறது.
கண்காட்சி நடைபெறும் புதுச்சேரி தாவரவியல் பூங்கா வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், மலர் அரங்குகள் உள்ளிட்டவற்றை வேளாண் அமைச்சர் இரா. கமலக்கண்ணன் புதன்கிழமை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் 32-ஆவது மலர் கண்காட்சி பிப். 2-ஆம் தேதி தொடங்குகிறது. தொடக்க விழாவில் ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர் அஸ்வினிகுமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். பிப். 4-ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறும். இதில் புணே, ஒசூர் பகுதியில் இருந்து தருவிக்கப்பட்ட மலர்கள், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு மலர்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
வேளாண் துறை சார்ந்த அனைத்து வகை துறை செயல்பாடுகளும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. ஆத்மா உள்ளிட்ட திட்டங்கள் மூல் நடைபெறும் திட்டங்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இதில், மலர்கள் காய்கனிகளில் சிறந்தவற்றை காட்சிக்கு வைத்திருக்கும் புதுவை மாநிலத்தவர்களுக்கு சிறந்த காய்கறி ராஜா, காய்கறி ராணி என்ற பட்டம் வழங்கப்படும்.
புதுவை சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
மலர் கண்காட்சிக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலர்களால் உருவாக்கப்பட்ட நகரம் போன்ற தோற்றம் புதுச்சேரியில் ஏற்படுத்தப்பட உள்ளது.
இயற்கை விவசாயத்தை மேம்படுத்த மத்திய வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் மூலமாக ரசாயன கொல்லியை தவிர்க்கும் வகையில் திரவ வடிவில் உயர் ரக நோய் கொல்லி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
26 வகையான மலர்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் கமலக்கண்ணன்.