குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை 

புதுச்சேரி அருகே பச்சிளம் குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டார். 

புதுச்சேரி அருகே பச்சிளம் குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டார்.
 விழுப்புரம் மாவட்டம், அனுமந்தையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (37). புதுச்சேரியில் பிளம்பிங் பொருள்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கழுப்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்திரகலா (33) என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்னர் புதுச்சேரி காலாப்பட்டு பிள்ளையார்கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 11 மாதத்தில் யோகிதா என்ற பெண் குழந்தை இருந்தது.
 இந்த நிலையில் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல கடைக்குச் சென்றார். வீட்டில் சந்திரகலா தனது குழந்தையுடன் இருந்துள்ளார். காலை முதல் வெகுநேரமாக சந்திரகலாவும், குழந்தையும் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த வாடகை வீட்டின் உரிமையாளர் சீனிவாசன், அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவு திறக்கப்படவில்லையாம். பின்னர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தாய், குழந்தை இருவரும் தனித் தனி சேலையில் தூக்கில் பிணமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து காலாப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 இதையடுத்து காவலர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தாய், குழந்தையின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காலாப்பட்டு காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததும், திங்கள்கிழமை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. அதனால், மனமுடைந்த சந்திரகலா, தனது குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com