பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகிற 24-ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்.
புதுவை மாநில எல்லை அருகே அமைந்துள்ள தமிழகப் பகுதியான சர்வதேச நகரமான ஆரோவில் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதன் பொன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், பிரதமர் எந்த தேதியில் வருவார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 24-ஆம் தேதி பிரதமர் வருவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக புதுவை மாநிலத் தலைவர் சாமிநாதன் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிப்ரவரி 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வருகிறார். ஆரோவில் நகரின் பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், பாஜக நிகழ்ச்சியிலும் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். பிரதமரின் சுற்றுப் பயண விவரம் புதன்கிழமை முழுமையாகத் தெரியவரும் என்றார் அவர்.
புதுவை துறைமுக சரக்கு முனையம் திறப்பு விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பங்கேற்கும்படி புதுவை அரசு சார்பில் பிரதமருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சேதராபட்டில் 40 ஏக்கர் நிலத்தில் ரூ.900 கோடி செலவில் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பான நிகழ்விலும் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்பாரா என்பது விரைவில் தெரியவரும்.