புதுச்சேரி அருகே இளைஞர் கொலை
புதுச்சேரி அருகே இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
புதுவை, வில்லியனூர் உத்திரவாகினிபேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது 2-ஆவது மகன் ஏழுமலை (23). மாட்டு வண்டித் தொழிலாளியான இவர், 2014-ஆம் ஆண்டில் மோகன்தாஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7-ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். மோகன்தாஸின் நண்பர் கரையாம்புத்தூரைச் சேர்ந்த ரவி (எ) ரவிவர்மன், ஏழுமலையின் உறவினர் ஆவார். தனது நண்பரை கொன்றவர்களை பழிவாங்க ரவி நினைத்தாராம்.
இதனிடையே மணல் ஏற்றி வருவதிலும் ரவிக்கும், ஏழுமலைக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிவந்த ஏழுமலை வீடு திரும்பினார்.
பின்னர் தனது வீட்டு வாசலில் தனது நண்பர் ஜெகதீசன் உள்ளிட்ட 4 பேருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரவி, காலாப்பட்டை சேர்ந்த சுகன் மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் 4 பேர் முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு வந்தனர்.
அவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஏழுமலையை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க முயன்ற ஜெகதீசனுக்கு காலில் வெட்டு விழுந்தது.
இதில் ஏழுமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்தக் கும்பல் தப்பிவிட்டது.
இந்தச் சம்பவம் குறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வாகுப்தா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.