கிறிஸ்தவர்களின் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி முதல் நாளான சாம்பல் புதன்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு 40 நாள்களுக்கு முன்பு தனது சீடர்களுடன் காட்டுக்குள் சென்று உணவு அருந்தாமல் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். அந்த முதல் நாளை சாம்பல் புதன்கிழமை என உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சாம்பல் புதன்கிழமையான பிப்.14-ஆம் தேதி புதுவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புதுச்சேரி ஜென்மராக்கினி பேராலயம், புனித இருதய ஆண்டவர் தேவாலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை தேவாலயம், முத்தியால்பேட்டை மாதா தேவாலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா அன்னை தேவாலயம், வில்லியனூர் புனித லூர்து அன்னை தேவாலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை தேவாலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியார் தேவாலயம், உப்பளம் புனித சவேரியார் தேவாலயம், புதுச்சேரி புனித யோவான் சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்டவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்களுக்கு பங்குதந்தை சாம்பலை பூசி, மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்று கூறினார்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இயேசுவின் பாடுகளை உணர்த்தும் சிலுவைப்பாதை நிகழ்வுகள் தேவாலயங்களில் நடைபெற உள்ளன.
வில்லியனூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு சிலுவைப்பாதையும், திருப்பலியும் நடைபெற உள்ளன.