புதுவையில் வாரியத் தலைவர்கள் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அரசியல் செய்து வருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் வாரியத் தலைவருமான எம்.என்.ஆர்.பாலன் குற்றஞ்சாட்டியுனார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நான் கடந்த 14.7.2016 முதல் 13.7.2017 வரை புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக பணியாற்றினேன். அக்கால கட்டத்தில் நான் கழகத்தின் பணத்தை தவறுதலாக செலவு செய்ததாக என் மீது தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
நான் பதவியில் இருந்த ஓராண்டு முழுவதும் ரூ.88 ஆயிரத்து 582 மட்டுமே டீசலுக்காக செலவு செய்துள்ளேன். இதை நாள் ஒன்றுக்கு என கணக்கிட்டால் 3.5 கி.மீ.செலவாகத்தான் உள்ளது.
தொலைபேசிக்காக ரூ.19,382 செலவு செய்துள்ளதாக கூறுகின்றனர். அந்தத் தொலைபேசி தற்போதும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் உள்ளது. தற்போதும் அது பயன்படுத்தப்பட்டுதான் வருகிறது.
எனக்கு என்று தனியாக காரோ, தொலைபேசியோ வாங்கியது இல்லை. நான் தலைவராக பதவியேற்றபோது சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் கொடுத்த காரையும், தொலைபேசியையும் தான் பயன்படுத்தினேன்.
ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில், உதவியாளர், ஓட்டுநர், எழுத்தர் உள்ளிட்ட 5 பேரைத்தான் நியமித்துக்கொண்டேன்.
அவர்கள் 5 பேருக்கும் வழங்கிய ஊதியம் தான் ரூ.10 லட்சத்து 74 ஆயிரத்து 474. நான் ஒரு பைசா கூட சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் இருந்து எடுத்துச் செலவு செய்யவில்லை.
லெட்டர் பேடு அமைப்புகள் புகார் அளித்தால் ஆளுநர் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்க வேண்டும். அல்லது அந்நிறுவன அதிகாரி, துறைச் செயலர் ஆகியோரையாவது அழைத்து விசாரிக்க வேண்டும்.
அதை விடுத்து தேர்தல் ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் புகார் அனுப்பியிருப்பது சரியல்ல. ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது. மக்களுக்கு பொய்யான தகவலை பரப்பக்கூடாது.
நான் பதவிக்கு வந்த பின்னர்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை வளர்ச்சி பெறச்செய்ய என்னென்ன செய்ய வேண்டும் ஆய்வு செய்து அறிக்கையை ஆளுநருக்கு வழங்கினேன்.
அதுவரை அவருக்கு அரசு நிறுவன ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புத்தொகை (பி.எப்.) செலுத்தவில்லை என்பது தெரியாது. எனது அறிக்கைக்குப் பின்னரே பி.எப். செலுத்தாதது குறித்து விமர்சனம் செய்தார் என்றார் அவர்.