புதுவைக்கு கூடுதல் நிதி ஒதுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவேன் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
புதுச்சேரி துறைமுகத்தில் சரக்கு கப்பல் வெள்ளோட்டத்தை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி துறைமுகம் புதுவையின் சொத்து. நீண்ட காலமாக துறைமுகம் பயன்பாட்டில் இல்லை. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது அதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது.
துறைமுகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு சாலைப் போக்குவரத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு தனி புறவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. துறைமுகத்தில் உப்பனாறு கழிவுகள் கலக்கின்றன. அது தடுக்கப்படும்.
மீண்டும் துறைமுகத்தில் தூர் உருவாகும் அளவுக்கு விடக் கூடாது. ஏனெனில் தூர்வாருவதற்காக அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதால் அமைச்சரவை கூடி என்ன தெரிவிக்கிறதோ அதை பிரதமரிடம் தெரிவிப்பேன்.
மேலும் புதுவைக்கு நிதியை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்றார் அவர்.