"அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை': புதுவை முதல்வர் வே.நாராயணசாமி

அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
"அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை': புதுவை முதல்வர் வே.நாராயணசாமி

அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கத் தயாராக இருப்பதாக டிச.31-ம் தேதி அறிவித்தார். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கட்சி தொடங்கும் உரிமை உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது வரவேற்கத்தக்கது.

தமிழகம் பரந்து, விரிந்த மாநிலம். தமிழகத்தில் திரைப்பட நட்சத்திரங்களில் அரசியல் கட்சி தொடங்கி சிலர் வெற்றி பெற்றுள்ளனர். பலர் தோல்வி அடைந்துள்ளனர். ரஜினி எடுக்கும் நடவடிக்கையைப் பொருத்து அவர் நிலைத்து நிற்பாரா?, இல்லையா? என்பதை கூற முடியும்.

ரஜினி, தமிழகத்தில் குறிப்பாக அ.தி.மு.க.வில் உள்ள குழப்பத்தைப் பார்த்து அரசியல் கட்சி தொடங்க முயற்சிப்பதாக கருதுகிறேன்.

தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பலமான அணியாக உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் வேறூன்றி உள்ளன. ரஜினி ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பில்லை. எந்த மதமும் அரசியலுக்கு தேவைப்படாத ஒன்று. எனவே, ரஜினியின் பேட்டி தெளிவு இல்லாததைப் போல உள்ளது. காலம்தான் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பதில் கூறும்.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்றன. முதல் மூன்று மாதங்களில் 45 கோடி ரூபாய் வரி இழப்பு இருந்தது. தற்போது வரி வருவாய் வரத் தொடங்கியுள்ளது. இதற்கு உரிய காலத்தில் வியாபாரிகள் கணக்கு கொடுக்காதது, ஜிஎஸ்டியின் இணையதளம் முறையாகச் செயல்படாதது, ஜிஎஸ்டி விதிகளை நிறுவனங்கள் தவறாகப் புரிந்து கொண்டது ஆகியவைதான் காரணம்.

5 ஆண்டுகளுக்கு வரி இழப்பு கொடுக்கப்படும் என்பது சட்டத்தில் இருப்பதால், வரி இழப்பு கிடைக்கும். ஜிஎஸ்டிக்கு முன்பு சேவை வரி முழுவதும் மத்திய அரசுக்குச் செல்லும். தற்போது 50 சதவீதம் மாநில அரசுக்கு கிடைக்கிறது. அதுபோல, மாநில அரசுக்கு கிடைத்து வந்த வணிக வரியின் 100 சதவீத தொகையில் 50 சதவீதம் மத்தியஅரசுக்குச் செல்கிறது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கண்டிப்பாக கிடைக்கும் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com