புதுச்சேரியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி புதுவை நகராட்சி கொம்யூன் கூட்டு போராட்டக் குழுவினர் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது அதிகாரிகள் அழைத்துப் பேசினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உறுதி அளித்தபடி 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்
படுத்தவில்லை.
இதையடுத்து, கூட்டு போராட்டக் குழுவினர் உள்ளாட்சித் துறை அலுவலகத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
நகராட்சி மற்றும் கொம்யூன் தலைவர் ஆனந்தகணபதி, ஏஐடியூசி ஒருங்கிணைப்பாளர் கணேசன், சிஐடியூசி தலைவர் ராமச்சந்திரன், மத்திய கூட்டமைப்பு பொறுப்பாளர் ராம்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க தலைவர் சீனிவாசன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 7- வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் எனத் தெரிவித்தனர்.