சீறிவரும் காளையை கொம்பையும் திமிலையும் பிடித்து வீரர் ஒருவர் அடக்குவது போன்ற தத்ரூபமான, பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு ஓவியத்தை பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் வரைந்து அசத்தினர்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் பாரதியார் பல்கலைக்கூடம் அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் ஓவியம், சிற்பம், நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை போற்றும் வகையிலும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு ஓவியத்தை மாணவர்கள் வரைந்துள்ளனர்.
90 அடி அகலமும், 60 அடி உயரத்திலும் இந்த ஓவியத்தை வண்ணப் பொடிகளைக் கொண்டு உருவாக்கியுள்ளனர்.
பயன்பாட்டு கலை, ஓவியம், சிற்பக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 20 மாணவர்கள் இதனை வரைந்துள்ளனர். வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மாணவர்கள் இந்த ஓவியத்தை வரைய தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு முடித்தனர். சீறிவரும் காளையை மாடுபிடி வீரர் அடக்குவது போன்ற இந்த தத்ரூப ஓவியத்தை மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.