மத்திய அரசு ஒதுக்கிய ரூ.342 கோடியில் புதுவை துறைமுக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
புதுவை துறைமுகத்தை சீரமைக்க சாகர்மாலா என்னும் குழு முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அமைச்சர் மு.கந்தசாமி, தலைமைச் செயலர் அஸ்வினிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நாராயணசாமி தலைமையில் அமைச்சர் கந்தசாமி, தலைமைச் செயலர் அஸ்வினிகுமார், பொதுப்பணித்துறைச் செயலர் அன்பரசு, நிதித்துறைச் செயலர் கந்தவேலு, துறைமுகத்துறை செயலர் பார்த்தீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அரசு வழங்கிய ரூ.342 கோடியில் பழைய துறைமுகத்தில் சுற்றுலாத்தளத்தை சீரமைப்பது, பாலம் கட்டுவது, முகத்துவாரத்தில் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்வது, கடற்கரையில் செயற்கை மணல்பரப்பை உருவாக்குவது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.