சுற்றுலாப் பயணிகளிடம் வழிப்பறி செய்ய ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே உள்ள நோணாங்குப்பத்தில் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது. இந்தப் புகாரின் பேரில், அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் ரங்கநாதன், காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் காவலர்கள் புதன்கிழமை இரவு அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, போலீஸாரை கண்டதும் அந்தக் கும்பல் தப்பி ஓடியது. அதில் 3 பேரை காவலர்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து கத்தி, மிளகாய் பொடி 3 செல்லிடப்பேசி, ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் உருளையன்பேட்டையைச் சேர்ந்த ஜான்சன் ராஜ் (எ) சுரேஷ் (30), முத்தியால்பேட்டை டிவி நகரைச் சேர்ந்த ஏழுமலை (33), நேரு நகரைச் சேர்ந்த விஜி (எ) கட்ட விஜி (29) ஆகியோர் என்பதும், அவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபடும் நோக்கில் ஆயுதங்கள், மிளகாய் பொடியுடன் பதுங்கியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களைக் கைது செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.