காரைக்கால் அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருந்துகளை இருப்பு வைக்கவும், மருத்துவர்களை நியமிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்கால் பிராந்திய எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் வலியுறுத்தியுள்ளனர்.
நெடுங்காடு தொகுதி உறுப்பினர் சந்திரபிரியங்கா (என்.ஆர். காங்கிரஸ்) பேசியதாவது:
நெடுங்காடு மருத்துவமனையில் ரத்த அழுத்தம், நீரழிவு நோய்க்கான மருந்துகள் அதிகமாக வழங்க வேண்டும். காரைக்காலுக்கு மருத்துவக் கல்லூரி அமைத்து தர வேண்டும். அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்தக் கூடாது என திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
நிரவி தொகுதி உறுப்பினர் கீதா ஆனந்தன் (திமுக): காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு தேவையான இயந்திரங்கள், மருந்துகளை வாங்கித் தர வேண்டும். ஜிப்மர் கல்லூரி மருத்துவர்கள் காரைக்கால் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிக்க வேண்டும். கண் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், இயந்திரங்கள் என அனைத்தும் கொடுக்கப்பட வேண்டும்.
ஆதிதிராவிடர்களுக்கு அரசின் ஈமச் சடங்கு நிதி கிடைப்பதில்லை. மீன் உலர் தளம் ஒன்றை காரைக்காலுக்கு கட்டித் தர வேண்டும். பட்டனச்சேரியில் யூ வடிவ வாய்க்காலை எல் வடிவ வாய்க்காலாக மாற்றி அமைக்க வேண்டும். கரிக்கலாச்சேரிக்கு தடுப்பணை கட்ட வேண்டும்.