தீயணைப்புத் துறைக்கு ரூ.3.50 கோடி நிதி தேவை என்று கல்வி மற்றும் தீயணைப்புத் துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய நெட்டப்பாக்கம் தொகுதி உறுப்பினர் (காங்.) விஜயவேணி, நெட்டப்பாக்கம் தொகுதி கரையாம்பத்தூரில் இந்த ஆண்டாவது தீயணைப்பு நிலையம் அமைத்துத் தரப்படுமா என்றார்.
அமைச்சர் கமலக்கண்ணன்: நிதி நிலையை பொறுத்து அமைக்கப்படும்.
விஜயவேணி: கரையாம்பத்தூர் பகுதியில் அதிகளவில் கூரை வீடுகள் உள்ளன. எனவே விரைந்து கட்டித் தர வேண்டும்.
அமைச்சர் கமலக்கண்ணன்: தீயணைப்புத் துறைக்கு ஒதுக்கிய நிதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.50 லட்சம் வேறு துறைக்கு மாற்றிக் கொள்ளப்பட்டுவிட்டது.
ஒரு வாகனம் வாங்கவே ரூ.80 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை செலவாகும். இதனால் இந்த ஆண்டு ரூ.3.50 கோடி நிதி கேட்டுள்ளேன். முதல்வர் நிதி வழங்கினால் உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றுவேன்.
விஜயவேணி: அங்கு கட்டப்படும் குடியிருப்பில் யாரும் குடியேறமாட்டார்கள். எனவே அப்பணத்தில் தீயணைப்பு நிலையம் கட்ட வேண்டும்.
முதல்வர் நாராயணசாமி: தீயணைப்பு நிலையம் கட்ட கூடுதலாக ரூ.2 கோடியாக உயர்த்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.