மறைமலை அடிகள் பெயரில் விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது பாராட்டுக்குரியது என்று புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் க.தமிழமல்லன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு, தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார் பெயரால் விருது ஒன்றை ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்மொழி எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அடிப்படையான தனித்தமிழ் இயக்கத்தை 1916-இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார்
பெயரால் விருது வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பை தனித்தமிழ் இயக்கம் மனமார வரவேற்கிறது.
அயோத்திதாசப் பண்டிதர் பெயராலும் விருது வழங்கப்படும் என்பதும் வரவேற்கக்கூடியது.
தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட அறிஞர்களின் நுôல்களை அரசுடைமை ஆக்கும் அறிவிப்பையும், டிரிப்பிளிகேன், டூட்டிக்கொரின் என்பது போல் ஆங்கில ஒலிப்பால் சிதைக்கப்பட்ட தமிழ் ஊர்ப்பெயர்களைத் திருத்திச் செம்மைப்படுத்தும் திட்டத்தையும் தனித்தமிழ் இயக்கம் வரவேற்கிறது.
அன்றாட பயன்பாட்டில் உள்ள பிறமொழிச் சொற்களுக்கேற்ற தனித் தமிழ்ச் சொற்கள் உருவாக்கி நுôலாக வெளியிடப்படும் என்னும் சிறந்த திட்டத்தையும் தனித்தமிழ் இயக்கம் வரவேற்கிறது. இதுவரை இல்லாத வகையில் தொல்காப்பியர் சிலையை அமைக்கும் நல்ல அறிவிப்பையும் மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
சென்னையில் மறைமலையடிகளார்க்கு தமிழக அரசு முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என்றும் தனித்தமிழ் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
தனித்தமிழ் இயக்க நுôற்றாண்டு விழாவை தமிழக அரசு சிறப்பாக இனியேனும் கொண்டாட வேண்டும்.
சிறந்த தமிழ்ப் பணிகளைச் செய்யத் தொடங்கியுள்ள தமிழக அரசையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் மாபா.பாண்டியராசனையும் தமிழ் வளர்ச்சித் துறையையும் தனித்தமிழ் இயக்கம் பாராட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.