கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் அழைத்தது ஜனநாயக விரோதம் என்று புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பாஜக ஆட்சி அமைக்க துணைபோன மத்திய அரசு மற்றும் பாஜகவைக் கண்டித்து புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதுச்சேரியில் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நமச்சிவாயம் கூறியதாவது:
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு அதிக எம்எல்ஏக்கள் இருந்தாலும், பெரும்பான்மை எனக் கூறி பாஜகவை ஆட்சியில் ஆளுநர் அமர்த்தியுள்ளார். தொடர்ந்து மத்திய பாஜக அரசு மக்கள் விரோதமாகவே செயல்படுகிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தங்களது முகவர்களாக ஆளுநர்களை நியமித்து தொல்லை தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார் நமச்சிவாயம். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதில் மேலாண்மை ஆணையம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதே என்று அவரிடம் கேட்டதற்கு, "இது தொடர்பாக சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசிப்போம். அதை ஆராய்ந்து அடுத்தக்கட்ட முடிவை புதுவை அரசு எடுக்கும் என்றார்.
போராட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, பேரவை துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் அனந்தராமன், பாலன், ஜெயமூர்த்தி, தனவேலு, விஜயவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.