புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ நிலையத்தில் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் நவ.14-ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி குயவர்பாளையத்தில் உள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் சார்பில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சித்த மருத்துவ ஆராய்ச்சி அலுவலர் சித்ரா வரவேற்றார். நிலைய தலைமை அலுவலர் ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், சர்க்கரை நோய் கவலையுறும் வகையில் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் மட்டும் 7 கோடிபேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரிழிவு நோய் பரம்பரை வியாதியாக மட்டும் இல்லாமல், மற்றவரையும் தாக்கும். உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனே மருத்துவரிடம் தெரிவித்து பரிசோதனை செய்து கொண்டால் மட்டும் நீரிழிவு நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்று முடியும். பொதுமக்கள் தாங்களாவே சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது என்றார்.