கஜா புயலால் புதுவை மாநிலத்தில் 1,106 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5,358 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் செüத்ரி தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கஜா புயல் நாகப்பட்டினத்துக்கு தெற்கே வியாழக்கிழமை நள்ளிரவு கரையை கடக்கத் தொடங்கியது. இதனால், காரைக்கால் பிராந்தியத்தில் 90 முதல் 110 கி.மீ. வரை பலத்த காற்று வீசியது.
முன்னிரவு தொடங்கி காலை வரை பலத்த மழை பெய்துள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மேலும், பாதுகாப்பு கருதி துண்டிக்கப்பட்ட மின்விநியோகம் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
பலத்த காற்றினாலும், மழையினாலும் வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி முடிந்து, சாலைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. காரைக்கால் பகுதியில் இரு கர்ப்பிணிகள் தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குடிநீர் தங்குதடையின்றி வழங்கப்படுகிறது.
முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் மு. கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் காரைக்காலில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
புதுவை பிரதேசத்தில் காற்றுடன்கூடிய மழை வெள்ளிக்கிழமை காலை வரை பெய்துள்ளது. இதன் காரணமாக கீழே விழுந்த மரங்கள் உடனுக்குடன்அப்புறப்படுத்தப்பட்டன.
புயலால் புதுச்சேரி பிராந்தியத்தில் 46 மி.மீ., காரைக்கால் பிராந்தியத்தில் 54 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
புதுச்சேரியில் இருவரும் காரைக்காலில் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் ஒரு வீடும், காரைக்காலில் 1,105 வீடுகள் என மொத்தம் 1,106 வீடுகள் சேதமடைந்துள்ளன. புதுச்சேரியில் 106 பேர், காரைக்காலில் 4,751 பேர் என மொத்தம் 4,857 பேர் வெளியேற்
றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் 7 முகாம்கள், காரைக்காலில் 50 முகாம்கள் என மொத்தம் 57 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
புதுச்சேரியில் 158 பேர், காரைக்காலில் 5,200 பேர் என மொத்தம் 5,358 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், முழுமையான பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார் அபிஜித் விஜய் செüத்ரி.