மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புதுச்சேரியில் புயல் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கஜா புயலின் காரணமாக பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்துவதற்காக அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கஜா புயலை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதனால் அதிகப்படியான சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. மேலும், மழையால் ஏற்பட்ட சேதங்களையும் உடனுக்குடன் சரி செய்து வருகிறோம்.
கஜா புயலால் காரைக்காலில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம். புகார்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தொடர்ந்து மழையின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். காரைக்காலில் அதிகளவில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், 30 பேர் கொண்ட சிரமைப்புக் குழுவை அனுப்பி வைத்துள்ளோம். உள்ளாட்சி, பொதுப்பணித் துறை பணிகளை ஆங்காங்கே உள்ளவர்களே செய்து வருகின்றனர். புயலால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி விரைவில் நிறைவடையும் என்றார் நமச்சிவாயம்.