குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூட்டமைப்பினரை போலீஸாரால் கைது செய்தனர்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல், காவலர் தேர்வில் வயது வரம்பை உயர்த்துதல், புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்தக் கூட்டமைப்பின் முத்தியல்பேட்டை தொகுதி அமைப்பு நிர்வாகிகள் சார்பில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாணவர்கள் கூட்டமைப்பின் முத்தியல்பேட்டை தொகுதி அமைப்பின் மாநிலத் துணைச் செயலர் புவியரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.