புதுச்சேரி பஞ்சாலை கழக விவகாரத்தில் ஆய்வு தேவை என ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் துணைநிலை ஆளுநருக்கு அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டது.
அதன் விவரம்: 2011- ஆம் ஆண்டில் வீசிய தானே புயலால் புதுச்சேரி பஞ்சாலையில் சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆலை தொழிலாளர்களுக்கு 2011- ஆம் ஆண்டு டிசம்பர் 30- ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
எனினும், கோடிக் கணக்கில்
முழுமையாக ஊதியம் வழங்கப்பட்டது. முழுமையாகப் பணிபுரியாத நிலையில் அவர்களுக்கு கோடிக் கணக்கில் மாத ஊதியம் அளித்து வந்ததை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று அதை வெளிப்படுத்தினோம்.
அதன்படி, பணி வழங்காத நாள்களுக்கான சம்பளமாக (லேஆப்) கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் 524 ஊழியர்களுக்கு மாதம் ரூ. 51.95 லட்சம் வீதம் 2018- ஆம் ஆண்டு ஜூலை வரையில் ரூ. 37 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.
அரசு தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், எத்தனை ஆண்டுகளுக்கு லேஆப் அடிப்படையில் ஊதியம் வழங்க முடியும்? அரசு பொது நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளமே வழங்காத நிலையில், பணிபுரியாதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது பாரபட்சத்தைக் காட்டுகிறது. இதன் மூலமாக அரசு நிதியும் வீணடிக்கப்பட்டு வருகிறது.
எனவே, இந்தப் பஞ்சாலையை ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.