புதுவை பல்கலை.யில் 25 சதவீத இட ஒதுக்கீடு தேவை என சமூக நீதிப் பேரவை வலியுறுத்தியது.
இதுதொடர்பாக அதன் நிறுவனர் ஆர்.விசுவநாதன், தலைவர் டி.என்.தனராமன், ஒருங்கிணைப்பாளர் து.கீதநாதன் ஆகியோர் புதுவை ஆளுநருக்கு அண்மையில் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
புதுவை பல்கலைக்கழகம் புதுச்சேரி மக்களால் நிலம் வழங்கி உருவாக்கப்பட்டதாகும். புதுவை அரசும் மாநில மக்களின் நலன் சார்ந்து மின்சாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பல்கலைக்கழகத்துக்கு வழங்கியுள்ளது. குறிப்பாக, இந்தப் பல்கலைக்கழகம் புதுச்சேரி மாணவர்களின் சமூக நலன், கல்வி மேம்பாட்டுக்காக சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், பல்கலை.யில் வழங்கப்பட்டு வந்த புதுச்சேரி மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாதென பல்கலைக்கழக துணைவேந்தரான நீங்கள் அறிவித்துள்ளீர்கள். இந்த அறிவிப்பானது சமூக நீதிக்கு எதிரானதாகும். மேலும், புதுச்சேரி மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
எனவே, கடந்த காலத்தில் எப்படி புதுவை மத்திய பல்கலைக்கழகம் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதோ, அது தொடர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.