முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புதுச்சேரியில் சிலை நிறுவக் கோரி, முதல்வர் வே.நாராயணசாமியிடம், பாஜகவினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம், மாநில பாஜக துணைத் தலைவர் ஆர்.செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
மூன்று முறை பாரத பிரதமாக சிறப்பாக பணியாற்றியும், 9 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்றிய அடல் பிஹாரி வாஜ்பாயை கௌரப்படுத்தும் வகையில், புதுச்சேரி 100 அடி சாலை மற்றும் மேம்பாலத்துக்கு அவரது பெயர் சூட்டியும், அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மனுவின்போது, மாநில பொதுச் செயலர் எஸ்.ரவிச்சந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஓபிசி அணி மாநில பொறுப்பாளர் வி.கோபி, மாநில இளைஞர் அணித் தலைவர் மௌலிதேவன், ஏனாம் தொகுதி பொறுப்பாளர் எம்.மகேஷ், மாநில மீனவர் அணித் தலைவர் புகழேந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.