புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அருகே திருக்கனூர் சுப்பிரமணியபாரதி மேல்நிலைப் பள்ளியில் கலை, அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கு பள்ளி முதல்வர் சம்பத் தலைமை வகித்தார். துணை முதல்வர் சுசீலா சம்பத் வரவேற்றார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ டி.பி.ஆர்.செல்வம் கலந்துகொண்டு கண்காட்சியை தொடக்கிவைத்து, கலை, அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, மாணவர்களிடம் கலந்துரையாடினார். மாணவ, மாணவிகளின் 300-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த முதுநிலை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்று சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். பள்ளி முதல்வர் சம்பத், துணை முதல்வர் சுசீலா சம்பத் ஆகியோர் சிறந்த படைப்புகளை வைத்த மாணவ-மாணவிகள் மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
அரும்பார்த்தபுரம்
பள்ளியில்....
அரும்பார்த்தபுரம் திரு.வி.க. அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை பள்ளித் தலைமையாசிரியர் ஆசைதம்பி திறந்து வைத்தார். ஆசிரியை புஷ்பா முன்னிலை வகித்தார். கண்காட்சியில் கடல் நீரை நன்னீராக மாற்றும் முறை, சுனாமி எச்சரிக்கை, மழைநீரை சேமித்தல், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்தல், மூலிகை தாவரங்கள் பாரம்பரிய உணவுகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
கீழுர் பள்ளியில்....
கீழுர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு ஆசிரியர் தணிகாசலம் தலைமை வகித்தார். ஆசிரியர் நிலவழகன் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில், புவி வெப்பமடைதல், நீர் மேலாண்மை, மின் சக்தி சேமிப்பு, சூரிய சக்தி செயல்பாடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.