என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் புதன்கிழமை (செப்.12) திறக்கப்படவுள்ளது.
அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி தலைமை அலுவலகம் எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள என்.டி. மஹால் அருகே கிழக்கு கடற்கரையில் தற்போது செயல்பட்டு வருகிறது. அந்த இடம் அக்கட்சியின் மாநிலச் செயலாளரான என்.எஸ்.ஜே. ஜெயபாலுக்குச் சொந்தமானது.
அவர் அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளார். மேலும், அந்த இடத்தில் போதிய இட வசதியும் இல்லை.
இதனால் கட்சி விழாக்கள் நடைபெறும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கிடையே, வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கும் நோக்கில் கட்சியில் புதிய நிர்வாகிகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு புதிய நிர்வாகிகள் சேர்க்கப்படும்போது இட நெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும்.
இதன் காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகம் அங்கிருந்து ரெட்டியார்பாளையம், ஜவஹர் நகர் அருகே பொன்நகர் முதன்மை பிரதான சாலைக்கு (ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸ் அருகில் ) மாற்றப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா புதன்கிழமை (செப்.12) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், கட்சியின் நிறுவனர் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.
நிகழ்ச்சியில் கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள், மக்களவை உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், இயக்க தொண்டர்கள், மகளிர் குழுக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.