புதுவையில் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு நிர்வாக ரீதியாக இடையூறு செய்ததாக குற்றஞ்சாட்டி, துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு இடதுசாரி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட் செலாளர் அ.மு.சலீம், புதுவை பிரதேச மார்க்சிஸ்ட் செயலாளர் ஆர்.ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சி நாட்டு மக்கள் தலையில் பெரிய பொருளாதார சுமையை சுமத்தி இருக்கிறது. தாங்க முடியாத அளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை அறிவித்து இருக்கிறது.
4 ஆண்டு கால மோடியின் ஆட்சியைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஆதரவு அளித்த வணிக பெருமக்கள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து துறையினர், திரையரங்க உரிமையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்றி.
இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிராக அரசு நிர்வாகத்தை பயன்படுத்தி தலையீடு செய்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு, மக்களே இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு அளித்ததற்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளனர்.