குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கக் கோரி, புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாசுப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்காலில் உள்ள 2 கல்லூரிகள், மாஹே, ஏனாமில் தலா ஒரு கல்லூரி என மொத்தம் 5 பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 250}க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் சரிவர குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படவில்லையாம். நிகழ் மாதத்துக்கான சம்பளமும் இதுவரையிலும் வழங்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து லாசுப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செப். 12}ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பிப்மேட் ஆசிரியர்கள் சங்கத்தினர், தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர், அமைச்சக ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட 75}க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.